சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜா இசையில், பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் 1982ல் வெளியான மூன்றாம் பிறை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக, இன்றும் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்திய திரையுலகம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படைப்பு மூன்றாம் பிறை வெளியாகி வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது .
இந்த பெருமைமிகு நிகழ்வை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம், இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது. இந்த மலரில் படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் தொழில் நுட்ப கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் படத்தை வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம். அதன்பொருட்டு மூன்றாம் பிறை படம் தியேட்டரில் வெளிவந்த காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டும். கட்டுரையோடு படம் பார்த்த திரையரங்கம், ஊர் மற்றும் தங்களது அன்றைய மற்றும் இன்றைய புகைப்படத்துடன் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பிரசுரத்துக்கு தகுதியான சிறந்த கட்டுரைகளுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும். மட்டுமல்லமால் படம் வெளியான அரங்கம் அல்லது சுவரொட்டியுடன் உங்கள் புகைப்படம் இருந்தால் அதற்கும் சிறப்பு பரிசுகள் உண்டு. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்.
உங்கள் கட்டுரையை கீழே கொடுக்கப்பட்டுள்ள பாலு மகேந்திரா நூலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது இமெயில் முகவரி வழியிலோ அனுப்பலாம். புகைப்படங்கள் கட்டுரைகள் தெளிவாக இல்லாமல் இருந்தால் பிரசுரத்துக்கு ஏற்கப்படமாட்டாது . கட்டுரை அனுப்ப இறுதி தேதி 12-02—2022.
அனுப்ப வேண்டிய முகவரி
பாலு மகேந்திரா நூலகம், மகாலட்சுமி அடுக்ககம் , 4வது தெரு , அன்பு நகர்
வளசரவாக்கம் சென்னை
Email: balumahendralibrary@gmail.com
**இராமானுஜம்**