மும்பையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 221 எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 3) தொடங்கியது . காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டி தாமதமாக தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 44 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில், அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, அஜாஸ் பட்டேல் வீசிய 29.2 ஓவரில் ரன் எடுக்காமல் வெளியேறினார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி அதே ஓவரில் கடைசி பந்தில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
இந்த நிலையில் முதல் நாள் போட்டியின் கடைசி செஷனில் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 196 பந்தில் தனது நான்காவது டெஸ்ட் சதத்தை அடித்தார். இந்திய அணி இன்று 70 ஓவர்களை ஆடி 221 ரன்களை எடுத்திருந்தது. இதில் மயங்க் அகர்வால் மட்டும் 246 பந்துகளில் அதாவது 41 ஓவர்களை எதிர்கொண்டு 120 ரன்களை எடுத்திருந்தார். கிட்டத்தட்ட 60 சதவிகித ரன்களை மயங்க் அகர்வாலே எடுத்திருந்தார்.
முதல் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 221 எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
**-ராஜ்**
.�,