lஎம்ஜிஆர் மகன் – 100% பொழுதுபோக்கு : பொன்ராம்

Published On:

| By Balaji

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களைச் சுவாரசிய கலவையாகத் தந்த இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில்  எம்ஜிஆர் மகன் உருவாகி வருகிறது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அந்தோணிதாசன் இசையமைக்கிறார்,பாடல்களை யுகபாரதி, , கடல் வேந்தன், முருகன் மந்திரம் ஆகியோர் எழுதுகின்றனர். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில், “100% பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம்” என்கிறார் இயக்குநர் பொன்ராம்.

அவர் மேலும் கூறுகையில், “ஒரு சின்ன விசயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசாமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி), எம்ஜிஆர்-அன்பளிப்பு ரவி தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாகக் காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்,” என்றார்.

திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 சதவீதம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் எம்ஜிஆர் மகன் உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களைக் கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பொன்ராம்.

10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துக் கொடுக்க பொன்ராம் ஸ்கிரீன் சீன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட எம்ஜிஆர் மகன் திட்டமிட்டதைக் காட்டிலும் 13 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளார் இயக்குநர் பொன்ராம். இதன் காரணமாகப் படம் தயாராகி நீண்ட நாட்களாகியும் வெளியிடுவதில் சிக்கல் நீடித்தது படம் ஓடி வெற்றிபெற்றால் கூடுதல் செலவுத் தொகையான 3 கோடி ரூபாய் இயக்குநர் பொன் ராமுக்குத் தருவதாகத் தயாரிப்பு தரப்பு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியுள்ள பொன்ராம் முதன் முறையாக சசிக்குமார் நாயகனாக நடித்துள்ள எம்ஜிஆர் மகனை இயக்கியிருப்பது வியாபார வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share