சின்னம் பிரச்சினைலாம் சின்னப் பிரச்சினை:  அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

கொரோனாவுக்கு அப்புறம் நாம எங்கப் போனாலும், எப்டி இருந்தாலும்  எல்லா கர்ம வினைகளும் நம்மையே தேடி வருது. ஜாலியா ஸ்டேடஸ் போடலாம்னு பேஸ்புக் போனா…திருமணமாகாத ஆண்கள் கொரோனாவால் பலியாக வாய்ப்பு அதிகம்னு ஒரு நியூஸப் பாத்தேன். கொரோனாவுக்கு பயந்து வெளியே போகறனோ இல்லயோ பேஸ்புக் போகக்கூடாதுனு அப்பவே முடிவு பன்னிட்டேன்.

நேரா டீக்கடைக்கு போனேன். இன்னும் கொஞ்ச நாள்ல எலெக்‌ஷன் வரப்போறதால டீக்கடையில டீயவிட ஹாட்டா எலெக்‌ஷன் பேச்சுதான் போய்கிட்டு இருக்கு. இன்னைக்கு சின்னம் பத்தி  பிரச்சினை போய்கிட்டு இருந்தது. உட்டா அடிச்சிக்கிற அளவுக்கு புள்ளிவிவரங்கள அள்ளி தெளிச்சிகிட்டு இருந்தாங்க ரெண்டு பேரு.

அட எலெக்‌ஷனுக்குத்தான் நாள் இருக்க..இத ஏண்டா இப்பப் போட்டு உருட்டுறீங்கன்னு கேட்டோம். சின்னம் பிரச்சினைலாம் சின்னப் பிரச்சினைதான். டீக்கடையில சும்மா உக்காந்திருக்கவா..ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணாமா. அதான் நான்தான் பிரச்சினையை கிளப்பிட்டு கம்முனு இருக்கேங்கிறான் ஒருத்தன். நாம அவன் பக்கத்துல போக வேணாம். வெரி டேஞ்சரஸ் பெல்லோ…

நீங்க அப்டேட்ட பாருங்க.

**தர்மஅடி தர்மலிங்கம்**

ஏழுமலையான் கோயிலில் அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ் தரிசனம்!

கோவிந்தா கோவிந்தா!

**மயக்குநன்**

திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது!- எச்.ராஜா.

ஆமாமா… ‘நீர்மூழ்கிக் கப்பல்’..!

**மெத்த வீட்டான்**

காற்றாலை மூலம் குடிநீர் தயாரிக்கலாம் – மோடி

 #வாயாலும் வடை சுடலாம் !

**முகமூடி**

வாழ்க்கையில் கிடைத்தது எல்லாம் “லக்கு”..!!

கிடைக்காதது எல்லாம் “இலக்கு” என்று வாழ்ந்தால் சந்தோசமாக அமையும்..!!

**மித்ரன்**

நேற்றைய பொழுது நிஜமில்லை.. நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கும் மட்டும் தான் நம் கையில்! ~ பெரியய்யா

~ டேய் இது நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுல்ல..?!

**நாகராஜ சோழன் MA.MLA**

காற்றாலை மூலம் குடிநீர் தயாரிக்கலாம்.- மோடி ஜி

நமக்கு எப்படி செல்லூர் ராஜு  வோ …

அதே மாதிரி வடக்கு பக்கம் மோடி ஜி தான்…

**ச ப் பா ணி**

இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதை பலர் எரிச்சலாக உணர்கிறார்கள் – ஆய்வில் தகவல்

#ஆபிசுக்கு போவது அதைவிட எரிச்சல்

**தர்மஅடி தர்மலிங்கம்**

அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் தாம் இடம்பெறாததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்;-அமைச்சர் செங்கோட்டையன்!

அப்பறம் ஏன் அழறீங்க!?

நான் அழுவுலியே,கண்ணு வேர்க்குது!

**மயக்குநன்**

நான் பதவிகளுக்காக வாழவில்லை, லட்சியத்திற்காக வாழ்கிறேன்!- வைகோ.

அந்த லட்சியம் ‘பதவி’தானே..?!

**மன்னிப்பும் மாற்றமும்**

மகாத்மாகாந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.

எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.

காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.

அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலரினார்கள்.

ஆனால், காந்தி மட்டும் “ராம்!ராம்!!” என்று சொன்னது,

அவனை மிகவே

யோசிக்க வைத்தது.

அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.

ஆனால், காந்தியை அவ்வப்போது

உற்றுப் பார்த்தான்.

இலேசாகப் புன்முறுவல் காட்டினான். ஒரு நாள் “மிஸ்ட்டர் காந்தி”!என்று கனிவாக அழைத்து,

நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;

என்ன வேண்டும் என்றான்?

ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி.

இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது.

ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.

மகழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.

இன்று உங்களுக்கு

விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.

ஆனால், உங்களைப் பிரிய

என்னால் முடியவில்லை.

இது வருத்தமான செய்தி என்றான்

ஸ்மட்.

காந்தி சொன்னார்,

“நானும் உங்களுக்கு

ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி,

தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார்.

ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட் கேட்டான்,

“இவ்வளவு

துல்லிமாகத் தைக்க, அளவு எப்படிக் கிடைத்து” என்று கேட்க,

சிரித்தபடி காந்தி

தனது மார்புத் துண்டை அகற்றினார்; ஆரம்பத்தில்

ஸ்மட் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.

“இந்த வடுக்களை

அளந்துதான் தைத்தேன்” என்று காந்தி சொன்னார்.

“தடால்” என்று சத்தம்;

ஸ்மட் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக்

கதறினான்.

“நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!

என்னை மன்னித்து விடுங்கள்.

இனி யாரையும்

அடிக்க மாட்டேன்” என்றார்.

ஒரு நிமிடத்தில்,

ஒரு கொடிய மிருகம்,

மென்மையான

மனிதனாக மாறியது. “கல்லையும் கனியாக மாற்றலாம்” என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஸ்மட் சத்தியம் செய்தான்.

“இந்த பூட்ஸ்தான்

இனி எனக்குக் கடவுள்;

இதை மட்டுமே வணங்குவேன்”

என்று அப்படியே

வணங்கினான்.

“நாம் நினைத்தால், யாரையும்

மன்னிக்கவும் முடியும்;

மாற்றவும் முடியும்”.

வாழ்க! மகாத்மா காந்தி!!

**செ.பாலகிருஷ்ணன்.**

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share