கொரோனா அச்சுறுத்தல் குறைந்ததால், கடந்த வருடம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் 50% இருக்கையோடு சின்ன பட்ஜெட் திரைப்படங்களே தொடர்ச்சியாக வெளியாகிவந்தது. இந்நிலையில், பெரிய பட்ஜெட் திரைப்படமாக அனைவரின் எதிர்பார்ப்பும் நிறைந்த படமாக இருந்தது விஜய் நடித்த மாஸ்டர்.
திரையுலகின் மறுவாழ்வுக்கும், திரையரங்கினரின் மிகப்பெரிய நம்பிக்கையுமாக இருந்த மாஸ்டர் படமானது, அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாஸ்டர். 50% இருக்கை அனுமதியுடன் தமிழகத்தின் 90% திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி, இதுநாள் வரை அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசின் அறிவுரையும் மீறி சில திரையரங்குகளில் 100% இருக்கை நிறைந்த காட்சிகளும் அரங்கேறியது.
தமிழகத்தில் முதல்நாளில் மாஸ்டர் படத்துக்கு 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாம் நாளையும் சேர்த்தால் 40 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் படக்குழுவினர். இந்த வார இறுதிக்குள் நூறு கோடி வசூலைத் தொடும் என கணிக்கப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் தான் படத்தை ரிலீஸ் செய்தது. சொல்லப்போனால், படத்துக்கான ஒட்டுமொத்த உரிமையும் லலித்குமார் வசம் தான் இருக்கிறது. அதோடு, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லலித்குமாரே நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்தார். அதனால், 75% வசூல் நேரடியாக அவருக்குச் சென்றுவிடும். எப்படியும், இன்னும் ஒரு வாரத்துக்குள் முழு லாபத்தையும் லலித் எட்டிவிடுவார் என்றே தெரிகிறது.
தெலுங்கில் முதல்நாளில் 5.74கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஜய் படங்களிலேயே தெலுங்கில் அதிக வசூல் இந்தப் படத்துக்குதான். அதுபோல, இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் 90% திரையரங்குகளில் மாஸ்டர் தான் வெளியாகியிருக்கிறது. அதோடு, விஜய்படத்துக்கு வெளிநாடுகளில் இதுவரை கிடைக்காத வசூலாக, மாஸ்டர் கலெக்ஷன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-**ஆதினி**�,