துக்ளக் தர்பாரில் தனது முதல் காட்சியின் படப்பிடிப்பை பற்றி மஞ்சிமா மோகன் நினைவு கூர்ந்தார்.
சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன், ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய நடிகையானார். அதன் பின்னர், விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், கெளதம் கார்த்தியுடன் தேவராட்டம் ஆகிய படங்களிலும் தோன்றினார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும் நாயகியாக நடிக்கிறார் மஞ்சிமா. நேற்று(ஜூலை 8) துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று மஞ்சிமா மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவங்களை படங்களுடன் பகிர்ந்துள்ளார். மஞ்சிமா காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த சமயத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
துக்ளக் தர்பாரில் தனது முதல் காட்சியின் படப்பிடிப்பு அனுபவத்தை நினைவு கூர்ந்த மஞ்சிமா, துக்ளக் தர்பார் படத்தில் இது எனது முதல் காட்சி. அச்சமயம் உடல்ரீதியாக நான் தயாராகி வருவதையும், காலை ஊன்றிக்கொண்டு இருந்ததையும் நினைவில் கொள்கிறேன் (இது எனது அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக நான் காலில் நின்று நடக்க ஆரம்பித்தபோது). நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். இதற்கு முன்பு இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கவில்லை. நான் அந்த இடத்தை அடைந்தவுடனேயே டில்லி சார்(படத்தின் இயக்குநர்) வந்து, சம்பந்தப்பட்ட காட்சியை எனக்கு விளக்கினார். அவர் முதலில் கூறியது, “நீங்கள் நடக்க வேண்டும்” என்றார். நான் அதிர்ச்சியானேன். எப்படி நான் காலை ஊர்ந்து கொண்டு நடக்காமல், நடப்பதில் மட்டும் கவனம் செலுத்த முடியும்? மேலும் நடக்கும் போது அவர் என்னிடம் கேட்ட அனைத்து உணர்ச்சிகளையும் கொண்டு வர முடியும்? இயக்குநரிடம் என் பிரச்சனைகளைச் சொன்னேன். அவர் என்னிடம் செய்யச் சொன்னது எல்லாம் ‘என்னால் முடிந்ததை திரையில் கொடுங்கள், எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்’ என்பதே. அதைத்தான் நான் செய்தேன். சில நேரங்களில் நாம் முயற்சி செய்யும் வரை அதைச் செய்ய இயலாது என்றே நினைக்கிறோம்” என தனது பட அனுபவங்களை பகிர்ந்தார் மஞ்சிமா.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள படத்தில் பார்த்திபன், கருணாகரன், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”