மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இணைந்த ஹீரோ!

Published On:

| By Balaji

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே ஒன்று கூடியிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு போராட்டங்களைத் தாண்டி தற்போது தொடங்கிவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பிறகு சென்ற வருடம் சில நாட்கள் புதுச்சேரியிலும், சென்னையிலும் நடந்தது. அதன்பிறகு கொரோனா அச்சுறுத்தலால் நின்றுபோன படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் பல சிக்கல்கள். எங்கு படப்பிடிப்பை தொடங்குவது என்பதில் தொடங்கி எத்தனை பேர் படப்பிடிப்பில் கலந்துகொள்வது வரை எல்லாவற்றிலும் பல குளறுபடிகள் இருந்தன. இறுதியாக, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது படக்குழு.

ஐந்து பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டிருக்கிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாதி இடத்தை பொன்னியின் செல்வன் டீமே ஆக்கிரமித்திருக்கிறதாம். முதல்கட்டமாக சோழ நாட்டுக்கான வடிவமைப்பில் இருக்கும் செட்டில் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறதாம். ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் லீட் ரோல்களில் நடிக்கிறார்கள்..

குறிப்பாக, பெரிய பழுவேட்டரையர் ரோலில் சரத்குமார் நடிக்கிறார். இவருக்கு மனைவி கேரக்டரான நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டபுள் ரோல் என்பதால், மற்றொரு ரோலாக மந்தாகினி கதாபாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. படம் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு கேரக்டருக்கும் புதுப்புது நடிகர்களை அவ்வப்போது ஒப்பந்தம் செய்கிறார்கள். ஒரேயடியாக எல்லா கேரக்டரையும் ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் செய்யவில்லை. அதற்கு காரணமும் இருக்கிறதாம். பெரிய பட்ஜெட் படமென்பதால், திடீரென படப்பிடிப்பில் தாமதம் ஏற்படலாம். அதனால், முதன்மை கேரக்டர்களை மட்டும் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தவிர, படத்தில் வரும் சின்ன சின்ன ரோல்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்கும் நடிகர்களை பயன்படுத்திக் கொள்ள திட்டமாம். அப்படி, புதிதாக, நடிகர் ரகுமானை படத்தில் இணைத்திருக்கிறார்கள். நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்றும் தகவல்.

தோட்டா தரணி படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். எப்படியும், இந்த ஹைதராபாத் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் தொடரும் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு மாதத்தில் படத்துக்கான பாதி ஷூட்டிங்கை முடித்துவிடவும் திட்டமாம்.

**ஆதினி**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share