’மாநாடு’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நீண்டகால தயாரிப்பில் இருந்த படம் மாநாடு”. சிலம்பரசன் போன்று பல்வேறு சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் தாண்டி தயாரான படம் மாநாடு. நவராத்திரி பண்டிகை தினத்தில் படம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில் தற்போது திடீரென்று தீபாவளி ரேஸில் இந்தப் படம் குதித்திருக்கிறது.
ஏற்கெனவே தீபாவளியன்று ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. கூடவே அஜீத்தின் ‘வலிமை’யும் அன்றைக்கே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்களுடன் சிம்புவும் போட்டிக்கு வருகிறார் என்பது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திஇருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி “நிறைவான மகிழ்வில் ‘மாநாடு’ படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக் கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.” என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தயாரிப்பாளரின் விருப்பமா அல்லது நாயகன் சிம்புவின் விருப்பமா என்று தெரியவில்லை. ஆனால் தன்னம்பிக்கையுடன் களத்தில் குதிக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.
ஏனெனில் அண்ணாத்தயும் வலிமையும் போட்டியென்றாலே தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இந்த இரண்டு படங்களை திரையிட ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்.பின்பு ‘மாநாடு’படத்திற்கு திரையரங்குகள் எப்படி கிடைக்கும் என்கிற விவாதம் கோடம்பாக்கத்தில் தொடங்கிவிட்டது.
ஒருவேளை ‘வலிமை போட்டிக்கு வராமல் நவராத்திரிலேயே தனித்து களத்தில் இறங்கிவிட்டால் நிச்சயமாக மாநாடு மாநாடாக வெற்றி பெறும் என கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் ரஜினிகாந்த், விஜய், அஜீத் குமார் நடித்த படங்கள் வெளியாகும் அன்று வேறு படங்கள் வெளியிடப்பட்டால் படம் தோல்வியை சந்திக்கும் என்கிற பிம்பம் கடந்த பத்தாண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு நடிகனின் முகம் என்பதை கடந்து படத்தின் உள்ளடக்கம் ரெம்ப ரெம்ப முக்கியம் என்பதை மக்கள் நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவுக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்தி வருகிறார்கள்.
குறைவான திரையரங்குகளில் வெற்றிபெற்ற வரலாறு தமிழ் சினிமாவில் ஏராளம். பிம்பங்களை உடைக்கவே” மாநாடு” தீபாவளிக்கு களமிறங்குகிறது என்கிறது சிலம்பரசன் வட்டாரம்.
**-இராமானுஜம்**
�,”