பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதிவரை எஞ்சிய போட்டிகள் நடக்கின்றன.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த எட்டு அணிகள் இடையிலான 14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலால் பாதியில் நிறுத்தப்பட்டது. நான்கு அணியைச் சேர்ந்த வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி இந்தத் தொடர் மே 2ஆம் தேதியோடு தள்ளிவைக்கப்பட்டது. அப்போது 29 லீக் ஆட்டங்கள் நடந்திருந்தன.
இதையடுத்து இறுதிப்போட்டி உட்பட எஞ்சிய 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதிவரை எஞ்சிய போட்டிகள் நடக்கின்றன. மீண்டும் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை துபாயில் எதிர்கொள்கிறது. மறுநாள் (செப்.20) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் அபுதாபியில் மோதுகிறது. இறுதிப்போட்டி துபாயில் அரங்கேறுகிறது.
இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி தினமும் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் இருக்கும்போது முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்குத் தொடங்கி நடக்கும். மொத்தம் ஏழு நாட்கள் இரட்டை ஆட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
துபாயில் 13 ஆட்டங்களும், சார்ஜாவில் 10 ஆட்டங்களும், அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும் (6 வெற்றி, 2 தோல்வி), சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் (5 வெற்றி, 2 தோல்வி), பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் (5 வெற்றி, 2 தோல்வி, மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் (4 வெற்றி, 3 தோல்வி) உள்ளன.
**-ராஜ்**
.�,