ஐஷ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் லாரன்ஸ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் தங்களது அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக உள்ளனர்.
அந்த வகையில், நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு- தமிழ் பைலிங்குவல் படமான ‘வாத்தி’ மற்றும் தமிழில் அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் ஐஷ்வர்யாவும் சில வருடங்களுக்கு பிறகு ‘முசாஃபிர்’ என்ற மியூசிக் ஆல்பம் மூலமாக இயக்கத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தே மியூசிக் ஆல்ப பணிகளை பார்ப்பதும், டீமுடன் டிஸ்கஷன் என புகைப்படங்களை பகிர்ந்து வந்தார் ஐஷ்வர்யா.
இந்த நிலையில் நேற்று நடிகர் லாரன்ஸுடன் இருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்து ‘Work Mode On, லாரன்ஸ் அண்ணாவுடனான இந்த சந்திப்பிற்கு பிறகு ஆர்வமான ஒரு விஷயம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்ற கேப்ஷனை கொடுத்திருந்தார்.
நடிகர் லாரன்ஸூம் ஐஷ்வர்யாவுடனான இந்த சந்திப்பு புகைப்படங்களை பகிர்ந்து, ‘வாழ்த்துகள் தங்கச்சி! ராகவேந்திரா சாமி எப்பொழுதும் உன்னுடன் இருப்பார்’ என தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ் இப்பொழுது ‘துர்கா’ எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக, இதன் கதையை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்பு அவர்களுடைய மற்ற படங்களின் ஸ்டண்ட் காரணமாக இந்த படம் இயக்குவதில் இருந்து விலகினார்கள்.
தற்போது, இதனை இணைத்து ஐஷ்வர்யா, லாரன்ஸின் ‘துர்கா’ படத்தை இயக்க இருக்கிறாரா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து லாரன்ஸ் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘தங்கச்சி எப்பயுமே சந்தோஷமா இருக்கனும். அவங்க கூட சேர்ந்து வேலை பார்க்க போறேன் அப்படிங்கறது சந்தோஷமான விஷயம். சீக்கிரமே அது ஐஷ்வர்யா முறையா அறிவிப்பாங்க. அது வரைக்கும் நான் எதுவும் சொல்ல முடியாது’ என கூறியுள்ளார் லாரன்ஸ்.
**ஆதிரா**