இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கொரோனாவிற்கு முன்-பின் என்று தான் இருக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர்.
அதற்கு முன்னோடியாக மலையாள திரையுலகில் கொரோனா வைரஸ்க்கு பின்புதிதாக தொடங்கப்படும்
படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது பெறும் சம்பளத்தை 50 சதவீதம் குறைப்பது உறுதியான பின்பு அரசு அனுமதிக்கும்போது படப்பிடிப்பை தொடங்கலாம் என்று மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
தங்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்ததை சுட்டிகாட்டிய மலையாள நடிகர்கள் சங்கம் தங்கள் உறுப்பினர்கள் 50% சம்பள குறைப்புக்கு ஒப்புக்கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு முடிவை எடுக்க அல்லது பேசுவதற்கு கூட இங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்புகள் இல்லை. விஜய் ஆன்டணி, சில குறிப்பிட்ட கதாபாத்திர நடிகர்கள் தங்களது வழக்கமான சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்புகள் எல்லாம் விஜய் ஆண்டனியைத் தவிர மற்றவர்களுக்கு விளம்பரமாக அமைந்தது. அது தமிழ் சினிமா நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும், மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வேலைவாய்ப்பு இன்றி வீட்டில் இருந்த காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் சேர்த்து நடிக்க போகும் புதிய படங்களுக்கு சம்பளமாக வாங்கவேண்டும் என்ற மனோநிலையே இங்கு உள்ளது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இரண்டாம் கட்ட நிலையில் உள்ள சில நடிகர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் நேரிலும் தொலைபேசி மற்றும்வீடியோ கால் மூலமாக புதிய கதைகளை கேட்டுள்ளனர். உடனடியாக தற்போதைய சம்பளத்தில் 50% அட்வான்ஸ் தாருங்கள் என கேட்டதாக கூறுகிறார் இதில் சம்பந்தபட்ட தயாரிப்பாளர். எப்போது படப்பிடிப்பு தொடங்க முடியும் என்பது தெரியாது. கொரோனாவுக்கு பின் சினிமா வியாபாரம், திரையிடல் எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியாது குறைவான அட்வான்ஸ் தருவதாகக் கூறிய தயாரிப்பாளரிடம் ‘கொரானா முடிந்த பின் எனது சம்பளத்தை அதிகப்படுத்துவேன்’ குறைக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் மற்றொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், தமன் இசையமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்பட்டது. மேலும் இவை எல்லாமே முடிவாகி முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தம் உதவியாளர்களுடன் ஜூம் செயலி மூலம் திரைக்கதை விவாதம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது
ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ஏன்? என விசாரித்தால், விஜய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில் விஜய்க்கான தொகையை, தீர்மானிப்பதில் இழுபறி நீடிப்பதே காரணம் என தெரிகிறது. பிகில் படத்தில் நடிப்பதற்கு விஜய் நடிக்க வாங்கிய சம்பளம் 50 கோடி ரூபாய் அடுத்த படமான மாஸ்டருக்கு ‘நமக்கு நாமே’ திட்டம் போல 70 கோடி ரூபாய் சம்பளம் என விஜய் தீர்மானித்து தனது உறவினர்கள் பெயரில் படத்தை தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தான் நடித்த முந்தைய படத்திற்கு வாங்கிய சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாக கேட்டது கதாநாயகர்களின் பழக்கம். இதற்கு நடிகர் விஜய் விதிவிலக்கு இல்லை. 70 கோடிக்கு அதிகமாக விஜய் தனது சம்பளத்தை நிர்ணயித்துக் கூறியதால், கொரோனாவுக்கு பின் சினிமா வியாபாரம் வசூல் முன்பு போல் இருக்காது என தயாரிப்பு தரப்பு விஜய் கேட்கும் சம்பளத்திற்கு ஒப்புகொள்ள மறுத்து வருகிறது.
இதனால், திரைக்கதை உருவாக்கம் உள்ளிட்ட வேலைகள் தொடரட்டும், சம்பள விஷயத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் அப்படியே வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு மாறிவிடலாம் என்று நடிகரும்-இயக்குநரும் பேசி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
**-இராமானுஜம்**�,