பல மீம்ஸ்களுக்கு தீனி போட்ட ‘நாட்டாமை’ படத்தின் மிக்சர் சாப்பிடும் கதாபாத்திரம் உருவானதன் சுவாரசியமான பின்னணிக் கதை குறித்து அப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான படம் நாட்டாமை. சரத்குமார், மீனா, விஜயகுமார், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் இன்றளவும் கிளாஸிக்காக கொண்டாடப்படுகிறது. படத்தின் கதை, வசனங்கள், பாடல்கள் என இதன் வெற்றிக்கு பல அம்சங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவையும் பங்களித்தது.
வயதான காலத்திலும் பெண்களிடம் மட்டும் பேசும் அப்பா செந்தில், மகன் கவுண்டமணிக்கு கடைசி வரை அவரது அம்மா யார் எனக் கூறாமல் அலைக்கழித்துக் கொண்டே இருப்பார். இந்த காமெடி டிராக்கில் தொடர்ச்சியாக பெண் பார்க்கும் படலம் நடக்கும், அதில் ஒரு காமெடியில் தான் மணப்பெண்ணின் அப்பாவாக இந்த மிக்சர் சாப்பிடும் கேரக்டர் வரும். அந்தக் கேரக்டரை முன்வைத்து இப்போது வரை பலரும் மீம்ஸ் வெளியிட்டு டிரெண்டிங்காக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் – நடிகர் ஆரவ் இருவரும் நேரலையில் கலந்துரையாடினார்கள். அப்போது நாட்டாமை படத்தில் சில மீம்ஸ்களை காட்டிப் பேசிய ஆரவ், இந்த மிக்சர் சாப்பிடும் கேரக்டர் குறித்த மீம்ஸ்களை காட்டி, இந்த கேரக்டர் உருவாக்கியதன் பின்னணியை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டுள்ளார். உடனடியாக சிரித்த ரவிக்குமார், அது குறித்து கலந்துரையாடலில் கூறியது பின்வருமாறு:
முதலில் அந்தக் கேரக்டருக்கு அவரை நடிக்க வைக்கும் எண்ணமே இல்லை. வேறொருவரைத் தான் முடிவு பண்ணினோம். காமெடிக் காட்சியை எழுதி முடித்தவுடன், பார்க்கவரும் பெண்ணின் தற்போதைய அப்பா ஒருவர் வேண்டும் என்று அந்தச் சமயத்தில் தோன்றியது. இங்கிருந்து கூட்டிக் கொண்டு போன கம்பெனி நடிகர்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருப்பவர்கள் யாருமே செட் ஆகவில்லை. கொஞ்சம் வெள்ளையாக இருக்க வேண்டும்யா என்றேன்.
படப்பிடிப்புத் தளத்தில் ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரிபவர் இவர். ‘அவரைக் கூட்டிக்கொண்டு வா’ என்றேன். அவரோ உடனே பயந்துபோய் என்ன சார் ஆச்சு என்று பயந்துகொண்டே வந்தார். சும்மா உட்காருய்யா என்று சொன்னேன். சும்மா உட்கார்ந்திருந்தால் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்று கவுண்டமணியும் செந்திலும் சொன்னார்கள். அப்படியா, உடனே கையில் தட்டு கொடு.. போய் மிக்சர் ஏதாவது வாங்கிட்டு வாங்கடா என்று சொன்னேன்.
‘மிக்சர் சாப்பிட்டுட்டு இருப்பா, உனக்கு வசனமே கிடையாது’ என்றேன். என்ன கேட்டாலும் மிக்சர் சாப்பிடு, உடனே அவர்கள் ஏதாவது சொல்லிக் கொள்வார்கள் என்று சொன்னேன். டயலாக் அவருக்கு வராது என்பதால் அவருக்கு மிக்சர் கொடுத்தேன். அதைப் பார்த்தால் இப்போது மிக்சர் மாமா என்று பரவிவிட்டது. அந்த வசனங்கள் எல்லாம் கவுண்டமணியால்தான் இன்னும் ஃபேமஸ் ஆச்சு” எனக் கூறினார்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு பேசாத கதாபாத்திரம் இவ்வளவு பிரபலம் அடைந்தது என்றால் அது இவராகத்தான் இருக்கும்.
முழுமையான வீடியோ:
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”