நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 870 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தவர் நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம். அரசியல், சினிமா சம்பந்தமாக அவ்வப்போது டிவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடுவது இவரது பழக்கம்.
அதேபோன்று எல்லா பொறுப்புகளிலும் தோல்வியின்றி வெற்றி பெற்றுள்ள பாண்டவர் அணி குறித்தும், நடிகர் கார்த்தி குறித்தும் விமர்சித்து காயத்ரி ரகுராம் வெளியிட்ட பதிவு, தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி “வாக்காளர்களுக்கு நன்றி. நடிகர் சங்கத்துக்கு கட்டப்படும் கட்டிடத்தை கட்டி முடிப்போம் என்று உறுதியளித்திருக்கிறோம். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது அணியினருடன் சந்திக்க இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் பேச்சு குறித்து காயத்திரி வெளியிட்ட பதிவில், “தேர்தலில் நிறைய தில்லு முல்லு வேலை நடந்து இருக்கிறது. பொய்யான ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதைவிட, தேர்தலுக்கு பணம் செலவழிக்கிறார்கள். கோர்ட்டு வக்கீல் கட்டணத்திற்கு செலவு செய்கிறார்கள். ஆனால், நடிகர் சங்கம் கட்ட முடியாது. போலி வாக்குகளுக்காக இரண்டரை ஆண்டுகள் செலவழித்து வீணடித்திருக்கிறார்கள். கூடுதல் வாக்குகளை பற்றி விஷால் அணிக்கு முன்பே தெரியும் போலிருக்கிறது. மக்கள் நினைப்பது இது தான். தயவு செய்து அவர்களுக்கு பதில் சொல்லுங்கள் கார்த்தி.
போலி வாக்குக்கு பணம் செலவழிக்காமல் கட்டிடம் கட்டி இருக்கலாம். மேலும், கல்யாண மண்டபத்திற்கு தனது தந்தை நடிகர் சிவகுமாரின் பெயரை வைக்க வேண்டும் என்பது தான் கார்த்தியின் எண்ணம். நடிகர் சங்கத்தை அகரம் அறக்கட்டளை ஆக மாற்ற திட்டமிட்டுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
காயத்ரி ரகுராமின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு விஷால் மற்றும் கார்த்தி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
**இராமானுஜம்**