எல்லாம் உனக்காகத்தான் கண்மணி: நயன் குறித்து விக்னேஷ் சிவன்

Published On:

| By admin

காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா பற்றியும் அவரது கதாபாத்திரம் பற்றியும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘நானும் ரெளடிதான்’ படத்துக்கு முன்பே இந்தக் கதையை வைத்திருந்ததாகவும் அப்போதே நயன்தாராவிடம் கதை சொல்லி விட்டதாகவும் பேட்டிகளில் தெரிவித்திருந்தார் விக்னேஷ் சிவன். இந்தக் கதை படமாக வேண்டும் என நயன்தாரா மிகவும் ஆசைப்பட்டதையும் சொல்லி இருந்தார்.
இப்போது படம் வெளியாகி உள்ள சூழ்நிலையில் படத்துக்கு நயன்தாரா எந்த அளவு சப்போர்ட்டாக இருந்தார் என்பதை நெகிழ்ச்சியான பதிவாக பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
படத்தில் அதிரப்பள்ளியில் எடுத்துள்ள ஒரு படப்பிடிப்பு காட்சியில் நயன்தாராவுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, ‘என் தங்கமே, இப்போது கண்மணி! என் வாழ்வின் மிகப்பெரும் தூணாக இருப்பதற்கு நன்றி. என் தோள் மீது நீ நம்பிக்கையாகத் தட்டி கொடுப்பது (அந்த வீடியோவில் இருப்பதை குறிப்பிட்டு) என்னுடன் எந்த அளவுக்கு பலமாக என்னை வழி நடத்துபவளாக இருக்கிறாய் என்பதை காட்டுகிறது.
என் வாழ்வில் எப்போதெல்லாம் நான் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறேனோ அப்போதெல்லாம் ஒளியாக நீ கூட இருந்திருக்கிறாய். என்னை சரியான முடிவுகளை எடுக்க வைத்துள்ளாய். இதெல்லாம் சேர்த்துதான் இந்தப் படத்தையும் என்னையும் முழுமையாக்கி உள்ளது.

இந்தப் படம் நீ தான், இந்தப் படத்தின் வெற்றியும் நீதான். இது எல்லாம் உனக்காக, உன்னால்தான் கண்மணி!
நீ இப்படி திரையில் மிளிர்வதை பார்ப்பதற்கும் உன் சிறந்த நடிப்பை இயக்குநராக வெளிக்கொண்டு வருவதிலும் எனக்கு மகிழ்ச்சி. காதம்பரி போலவே மற்றொரு கண்மணியைக் கொண்டு வந்திருக்கிறேன். ரசிகர்களுக்கும் கண்மணி பிடிக்கும் என நம்புகிறேன்’ என ஒரு நீண்ட பதிவை இந்தப் படத்தின் வெற்றியை ஒட்டி பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share