ஜெய்பீம் படத்துக்கு மெருகேற்றிய கதாபாத்திரங்கள்!

Published On:

| By Balaji

ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்துள்ள நட்சத்திர கலைஞர்கள் குறித்தான தகவல்களை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டு பிளாக்பஸ்டர் படமாக அமைந்த திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்த திரைப்படத்தை பார்த்த பார்வையாளர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது. தீபாவளி வார இறுதியில் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்ட ஜெய்பீம் ஏகோபித்த விமர்சனங்களை பெற்று, ‘இந்த ஆண்டில் வெளியான சிறந்த சமூக நாடகங்களில் ஒன்று’ என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது. இந்த படைப்பில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் திரையில் தங்களுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவர்களைப் பற்றிய தகவல்களைஅனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த செய்தி குறிப்பை வெளியிடுவது எங்கள் கடமை என்று அமேசான் பிரைம் கூறியுள்ளது.

இதுகுறித்து அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

**’செங்கேணி’ ஆக நடித்த நடிகை லிஜோமோள் ஜோஸ்**

‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானவர். 2016 ஆம் ஆண்டு முதல் தனது நடிப்பாற்றலால் தனித்துவமிக்க கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் இதயத்தை திருடி வருபவர். ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தை ஏற்று, தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து அவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். தன் கணவனுக்கு நீதி கேட்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்ணின் கதாபாத்திரத்தில், அப்பெண்ணின் உணர்ச்சிகள், உரையாடல்கள் போன்ற பல நுட்பமான விசயங்களில் பிரத்யேக கவனம் செலுத்தி, செங்கேணியின் சோகத்தை உண்மையானதாகவும், நம்பக்கூடியதாகவும் பார்வையாளர்களுக்கு கடத்தி இருக்கிறார். மேலும் படத்தின் மையப்புள்ளியாகவும், இதயமாகவும் இருந்ததுடன் படைப்பின் ஆன்மாவாகவும் அவர் திகழ்ந்தார்.

**ராஜாகண்ணுவாக நடித்த நடிகர் மணிகண்டன்**

திரைப்பட எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் கே. மணிகண்டன். ‘ஜெய் பீம்’ படத்தில் தனது முன்மாதிரியான நடிப்பால் மீண்டும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 90களில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் மணிகண்டன், ராஜாக்கண்ணு வேடத்தில் நடித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராகவும், அச்சமற்ற மற்றும் துணிச்சலான குண நலன்களைக் கொண்ட பாத்திரத்தை அவர் ஏற்றிருக்கிறார். அவர் அநீதிக்கு எதிராக நிற்கும் தைரியம் மற்றும் தனது சுயமரியாதை மற்றும் நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாகவும் மிளிர்கிறார். கடின உழைப்பாளியாகவும், நேர்த்தியான கைவினை கலைஞராகவும் தன் கதாபாத்திரத்தின் வாழ்வாதார தன்மையை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி, பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட அந்த ராஜாக்கண்ணு கதாப்பாத்திரத்தை அற்புத நடிப்பாற்றலால் உயிர்ப்பித்திருக்கிறார். அவரது இயல்பான உடல் மொழி, உரையாடல் மொழி மற்றும் நடிப்பால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருவரிடமும் நேர்மறையான பாராட்டை பெற்றுள்ளார்.

**மித்ராவாக நடித்த நடிகை ரஜிஷா விஜயன்**

தொலைகாட்சி தொகுப்பாளினியும், அழகான இளம் நடிகையுமான ரஜிஷா விஜயன், ‘ஜெய் பீம்’ படத்தில் மித்ரா என்ற சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான காதல் காட்சிகளில் நடித்து, ஏராளமான பாராட்டுகளைப் பெற்று வரும் இவர், ‘ஜெய் பீம்’ படத்தின் கதையோட்டத்திற்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் வழக்கமான வேடத்திலிருந்து சவாலான வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

**எஸ்.ராம்மோகனாக நடித்த நடிகர் ராவ் ரமேஷ்**

தெலுங்கு திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் ராவ் ரமேஷ். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தில் அரசு தலைமைவழக்கறிஞராக நடித்து தன் திறமையின் வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தெலுங்கு நடிகரான இவரின் சரளமான தமிழ் உரையாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

**பெருமாள் சாமியாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ்**

இந்திய திரை உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் அனுபவம் கொண்ட மூத்த நடிகர் பிரகாஷ்ராஜ். ‘ஜெய் பீம்’ படத்தில் பெருமாள் சாமி என்ற போலீஸ் அதிகாரியாக தன் அனுபவமிக்க நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி, மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் கதையின் மைய நோக்கத்தை சமநிலைப்படுத்தும் வகையில் அமைந்ததால், அதனை உணர்ந்து அந்த கதாபாத்திரத்தை சக்தி வாய்ந்ததாக மாற்றி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.

**வழக்கறிஞர் சந்துருவாக நடித்த நடிகர் சூர்யா**

பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர் சூர்யா. ‘ஜெய் பீம்’ படத்தின் உண்மையான வெற்றிக்கு அடித்தளமிடும் வழிகாட்டும் சக்தியாக இருந்திருக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், கதையும், கதையின் விவரணமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதை உறுதி செய்யும் கதாபாத்திரமாக, தனது அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share