‘பீஸ்ட்’ படம் ‘கூர்கா’ படத்தின் காப்பியா என்ற கேள்விக்கு இயக்குநர் நெல்சன் பதிலளித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இந்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. ‘டாக்டர்’ பட வெற்றிக்கு பிறகு நெல்சன் நடிகர் விஜய்யுடன் முதன் முறையாக இணையும் திரைப்படம் என்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் இந்த படத்தின் ட்ரைய்லர் வெளியானது. ட்ரைய்லர் வெளியானதுமே பலரும் இது யோகி பாபு நடிப்பில் வெளியான ‘கூர்கா’ படத்தின் சாயல் போலவே உள்ளது. மேலும் பிரபல இணைய தொடரான ‘மணி ஹெய்ஸ்ட்’ கதையையும் இது நியாபகப்படுத்துகிறது என இணையத்தில் தெரிவித்து வந்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் நெல்சன் தற்போது பதிலளித்துள்ளார்.
’மால்லை ஹைஜாக் செய்வது போன்ற கதை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. அதை எப்படி உருவாக்கி இருக்கிறோம் என்பது தான் முக்கியம். ஆனால், இது போன்ற கதைகளில் ஒரே மாதிரியான காட்சிகள் வருவதை தவிர்க்க முடியாது.
’கூர்கா’ படத்திற்கும் என் படத்திற்கும் சம்பந்தமில்லை. ட்ரைய்லர் காட்சிகளை வைத்து மட்டுமே எந்த முடிவுக்கும் வர வேண்டாம். விஜய் என்னை அழைத்து கதை தயார் செய்ய சொன்ன போது உருவான கதை தான் இது. அவரது முந்தைய படங்களில் இருந்து இது வேறுபட்டதாக இருக்கும். அதே சமயம் கமர்ஷியல் பொழுது போக்கு படமாகவும் இருக்கும்’ என பதிலளித்துள்ளார்.
**ஆதிரா**