15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒன்பது அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாவது அணியான பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த சீசனில் எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில் 2022 ஐபிஎல்லில் இரண்டு புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கி உள்ளது.
அகமதாபாத் அணியை சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிட்டல் ரூ.5,600 கோடிக்கு வாங்கி உள்ளது. புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பத்து அணிகள் பங்கேற்பதால் இந்த சீசனுக்கான போட்டி முறைகள் மாறுதல் செய்யப்பட்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புனேயில் நடைபெறுகிறது. சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ்அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஒன்பது அணிகளுக்கு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஒரே ஒரு அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கு மட்டும் இன்னும் கேப்டன் அறிவிக்கப்படவில்லை.
பெங்களூர் அணிக்கு கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐபிஎல் கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டுபிளிசிஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
**ஒன்பது அணிகளின் கேப்டன்கள் யார், யார்?**
சென்னை சூப்பர் கிங்ஸ் – தோனி
மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் சர்மா
டெல்லி கேபிட்டல்ஸ் – ரிஷப் பண்ட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஸ்ரேயாஸ் அய்யர்
ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன்
பஞ்சாப் கிங்ஸ் – மயங்க் அகர்வால்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – லோகேஷ் ராகுல்
குஜராத் டைட்டன்ஸ் – ஹர்திக் பாண்ட்யா
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
**-ராஜ்**
.