ஐபிஎல் தொடரில் சாம்பியன் (சென்னை, மும்பை) அணிகளின் தொடர் தோல்விகளால் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொடரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது. கடந்த வருடம் இருந்த எட்டு அணிகளுடன் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இந்த முறை புதிதாக இணைந்துள்ளன.
இந்தத் தொடர் தொடங்கி தற்போது இரண்டு வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல் வாரத்தை ஒப்பிடுகையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 14 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு முதல் வாரத்தில் இருந்த 3.75 டிவிஆர் (Television Viewer Rating – TVR) இல் இருந்து 2.52 டிவிஆர் ஆக குறைந்துள்ளது.
தற்போது வரை நடந்துள்ள போட்டிகளில் லக்னோ, ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 14 முறை நடந்துள்ள ஐபிஎல் தொடரில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை மற்றும் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை அணி இதுவரை இந்தத் தொடரில் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ளன.
இந்த சாம்பியன் அணிகளின் தொடர் தோல்விகளால் தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மேலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
**ராஜ்**
.