38ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸை 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தி வெற்றி பெற்றது.
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. நேற்று (ஏப்ரல் 25) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் ஷிகர் அதிரடி காட்டினார். ஒருமுனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் தவன் பொறுப்புடன் விளையாடியதால், அந்த அணியின் ரன் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பனுகா ராஜபக்சேவும் (44 ரன்கள்) ஓரளவு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் அடித்தார்.
இதைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் உத்தப்பா ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். இந்த ஜோடியில் உத்தப்பா ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய சாண்ட்னர் 9 ரன்களும், ஷிவம் துபே 8 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இதனிடையே தனது அதிரடியால் ரன் ரேட்டை வேகமாக உயர்த்திக்கொண்டிருந்த அம்பத்தி ராயுடு தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்திருந்தநிலையில் 78 ரன்களில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய தோனி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் கேப்டன் ஜடேஜா 21 ரன்களும், பிரிட்டோரியஸ் ஒரு ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபடா மற்றும் ரிஷி தவான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.
இன்று (ஏப்ரல் 26) இரவு நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.
**-ராஜ்-**
.