ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி முதலிடம்!

Published On:

| By admin

10 அணிகள் இடையிலான 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்ரல் 27) இரவு நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் – குஜராத் அணிகள் மோதின. இதில் பரபரப்பான இறுதி ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
முதலில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக வில்லியம்சன் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சமி பந்து வீச்சில் வில்லியம்சன் போல்டு ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அரை சதம் கடந்து அசத்தினார். அவருடன் நிலைத்து நின்று ஆடிய மார்க்கரம் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். 56 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் தொடந்து சிக்சர்களை பறக்கவிட்டு யான்சென் – ஷஷாங்க் ஜோடி குஜராத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சமி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாஹா முதல் 4 பந்துகளில் நிதானம் காட்டினாலும் பின்னர் அதிரடியைத் தொடங்கினார். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அவர் பவுண்டரிகளாக விளாசினார்.
சுப்மன் கில் 22 ரன்களில் உம்ரன் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து வந்த பாண்டியாவும் 10 ரன்களில் வெளியேறினார்.நிதானமாக ஆடினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாஹா 28 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ஒருகட்டத்தில் குஜராத் அணி 11 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்கள் குவித்து இருந்தது.
சிறப்பாக விளையாடிய அவர் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மில்லர், அபினவ் மனோகர் அடுத்தடுத்து உம்ரான் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த திவேதியா – ரஷீத் கான் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். 19ஆவது ஓவரில் திவேதியா சிக்சர் பவுண்டரிகளாக பறக்க விட கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் பந்தில் சிக்சர் விளாசிய திவேதியா பின்னர் ஒரு ரன் எடுக்க ரஷீத் கான் ஸ்ட்ரைக்கில் வந்தார். மூன்று சிக்சர்களை விளாசிய அவர் கடைசி பந்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வெற்றி பெற செய்தார்.
பரபரப்பான இறுதி ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 28) இரவு நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

**-ராஜ்-**
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share