ஜெயிக்கப்போவது யாரு? இன்று ஐபிஎல் பைனல்!

Published On:

| By Balaji

ஐபிஎல் கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் இறுதிப்போட்டியில் சென்னை– கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் இன்று (அக்டோபர் 15) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது.

புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த சென்னை அணி இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியைத் தோற்கடித்து ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனி கடைசி ஓவரில் 3 பவுண்டரி விளாசியது, ரசிகர்களைப் பரவசப்படுத்தியது. அதே போன்று இறுதிப் போட்டியிலும் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

டோனியின் கேப்டன்ஷிப்பில் ஏற்கனவே 2010, 2011, 2018ஆம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ள சென்னை அணி, நான்காவது முறையாக இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

அதே சமயம் 2012, 2014ஆம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணியும் மூன்றாவது முறையாகக் கோப்பைக்குக் குறி வைத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக காணப்படும் கொல்கத்தா ஏற்கனவே லீக் சுற்றில் இரண்டு முறை சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் முனைப்புடன் காத்திருக்கிறது. இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

போட்டிக்கான பரிசுத்தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டு போன்றே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

**-ராஜ்**

.

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share