கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற போட்டியில் சென்னை அணியுடன் மோதிய பஞ்சாப் அணி தோல்வி அடைய, வெற்றியுடன் இந்த ஐபிஎல் விடைபெற்றது சென்னை அணி.
ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.
5.2 ஓவரில் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்கோர் 62 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறி்ஸ் கெய்ல் (12), நிக்கோலஸ் பூரன் (2) ஆகியோரை இம்ரான் தாஹிர் வெளியேற பஞ்சாப் அணி 72 ரன்னுக்குள் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 120 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
மந்தீப் 14 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தாலும் தீபக் ஹூடா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணிக்கு சற்று நம்பிக்கையை அளித்தார். அவர் 26 பந்தில் அரைசதம் அடித்ததால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 150 ரன்னை தாண்டியது. பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 30 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
154 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் டாஸ் சுண்டிய போது வர்ணனையாளர் டேனி மோரிஸ்சன், “சிஎஸ்கேவுக்கான கடைசி போட்டியாக இது இருக்குமா?” என்று டோனியை பார்த்து கேட்டார்.
அதற்கு எம்.எஸ். “ டோனி நிச்சயமாக இல்லை! (Definitely Not!) ” எனப் பதில் அளித்தார். ஆக, எம்.எஸ் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
**-ராஜ்**�,