ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி!

Published On:

| By admin

ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 5) இரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 37 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ஹெட்மயர் இறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பட்லர் அரை சதமடித்து அசத்தினார்
இறுதியில் ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. பட்லர் 70 ரன்னுடனும், ஹெட்மயர் 42 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டூ பிளேசிஸ் – அனுஜ் ராவத் நன்றாக விளையாடி வந்தனர். டூ பிளேசிஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஜ் ராவத் 26 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த டேவிட் வில்லி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற பெங்களூரு அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது ருத்தேர் போர்ட் 5 ரன்களில் வெளியேற பெங்களூரு அணி தங்கள் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது.
ஒருமுனையில் நிலைத்து நின்ற ஆடிய ஷபாஸ் அகமதுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். வந்த வேகத்தில் அவர் சிக்சர் பவுண்டரிகளாக விளாசினார். 12 பந்துகளில் 30 ரன்களை கடந்த அவர் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார்.
அவருடன் இணைந்து ஷபாஸ் அகமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெற்றிக்கு மிக தூரத்தில் இருந்த பெங்களூரு அணி இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியை நெருங்கியது. 18ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசிய ஷபாஸ் அகமத் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ட்ரெண்ட் போல்டு பந்துவீச்சில் வெளியேறினார்.
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் உடன் ஹர்ஷல் பட்டேல் இணைந்தார். அந்த ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச தினேஷ் கார்த்திக் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஓவரின் முதல் பந்திலே ஹர்ஷல் பட்டேல் சிக்சர் அடித்தார்.
இதனால் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று (ஏப்ரல் 6) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.
**- ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share