iஎஞ்சிய ஐபிஎல்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில்!

Published On:

| By Balaji

ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ என்று அழைக்கப்படும் இந்தப் போட்டிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது. இந்தப் போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைத்தது.

கடந்த (2020) ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடந்தது. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அங்கு ஐபிஎல் போட்டிகளின் ஒரு பகுதி நடத்தப்பட்டு இருந்தது.

14ஆவது ஐபிஎல் டி20 போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும்போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. உலகக் கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இலங்கை நாடுகளும் ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே ஐபிஎல் எஞ்சிய ஆட்டத்துக்காக டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றி அமைக்குமாறு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகிற 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (ஜூன் 18 முதல் 22 வரை) விளையாடுகிறது.

அதன் பிறகு இந்திய அணி, இங்கிலாந்துடன் ஐந்து டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும். ஐபிஎல் போட்டிக்காக செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் டெஸ்ட் போட்டிகளை முடிக்குமாறு இங்கிலாந்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட்டுக்கும், மூன்றாவது போட்டிக்கும் இடையே அதிக அளவு கால இடைவெளி இருப்பதால் இங்கிலாந்து போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. வருகிற 29ஆம் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு பொதுக்குழுவில் இதுகுறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share