இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்: ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published On:

| By admin

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 9) நடந்த போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி அதே மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 9) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
கேப்டன் ரோஹித் சர்மா (5 ரன்கள்), ரிஷப் பண்ட் (18 ரன்கள்), விராட் கோலி (18 ரன்கள்) ஆகிய முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினாலும் கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின்பு வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால்,இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46 ஓவர்களுக்குள் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share