eபிரிஸ்பேன் டெஸ்ட்: மழையால் நிறுத்தம்!

Published On:

| By Balaji

இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று (ஜனவரி 15) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமானார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே முகமது சிரஜ் வார்னரை சாய்த்தார். ஒரு ரன்னில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஏமாற்றம் அடைந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 5 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

ஸ்டீவ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் மேத்யூ வேட் ஜோடி சேர்ந்தார். லாபஸ்சேன் 37 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்தில் ராஹேனியுடம் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ரஹானே அந்த வாய்பை தவறவிட்டார். அதனால் அரைசதம் அடித்த லாபஸ்சேன், சதமாக மாற்றினார். மறுமுனையில் மேத்யூ வேட் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சதம் அடித்த லாபஸ்சேன் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி.நடராஜன் அசத்தினார். இந்த ஜோடி 113 ரன்கள் விளாசியது. லாபஸ்சேன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 65.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.

ஆறாவது விக்கெட்டுக்கு டிம் பெய்ன் உடன் கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தது.

இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. கேமரூன் க்ரீன் 28 ரன்களுடனும், டிம் பெய்ன் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (ஜனவரி 16) தொடங்கியது. சிறப்பாக ஆடிய டிம் பெய்ன் 50 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் அவுட் ஆனார். 47 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் க்ரீனும் வெளியேறினார்.

அடுத்துவந்த பேட் கம்னீஸ் 2 ரன்னில் வெளியேறினார். ஆனால், ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க் – நாதன் லயன் ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியது. லயன் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டாக் – ஜாஷ் ஹேசல்வுட் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, நடராஜன் பந்துவீச்சில் ஹேசல்வுட் போல்ட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார்.

இடைவேளை முடிந்த உடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. கில் 7 ரன்களும், ரோஹித் சர்மா 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஹானே 2 ரன்களும், புஜாரா 8 ரன்களும் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share