�ரிஷப் பன்ட் – வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி!

Published On:

| By Balaji

நான்காவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பன்ட்டின் சதம், வாஷிங்டன் சுந்தரின் அரை சதத்தால் சரிவிலிருந்து மீண்டுள்ளது இந்திய அணி.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று (மார்ச் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது.

அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அக்சர் படேல் நான்கு விக்கெட்டுகளையும் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 5) இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். ரோகித் சர்மா 49 ரன்கள், புஜாரா 17 ரன்கள், ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேநேரம் ரிஷப் பன்ட் – வாஷிங்டன் சுந்தர் ஜோடி, இங்கிலாந்து பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களைக் குவித்தது.

ரிஷப் பன்ட் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்தார். இதன்மூலம் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் சேர்த்துள்ளது.

வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் படேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

**- ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share