இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் முதலாவது, மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும், இரண்டாவது, நான்காவது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடரை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (மார்ச் 20) இரவு நடந்தது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இதில் ரோகித் 64 (34 பந்துகள் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள்) ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
எனினும், மறுமுனையில் விளையாடிய கோலி அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்க்க தொடங்கினார். மற்றொரு வீரரான சூர்ய குமார் யாதவ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை அடித்தார். அவருக்குப் பின் வந்த ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடினார்.
இந்தியா 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை குவித்தது. கோலி 80 ரன்கள் (52 பந்துகள் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள்) மற்றும் பாண்டியா 39 ரன்கள் (17 பந்துகள் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 225 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேற அடுத்ததாக டேவிட் மலானுடன், ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதத்தைக் கடந்தனர். 34 பந்துகளில் 52 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசிய ஜாசன் ராய், இந்திய பவுலர் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
மறுபுறம் டேவிட் மலான் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 46 பந்துகளில் 68 ரன்கள் குவித்து போல்டு ஆனார். இவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
ஏற்கெனவே டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, தற்போது டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புனேவில் 23ஆம் தேதி தொடங்குகிறது.
**-ராஜ்**
.�,