முதல் டெஸ்ட்: இந்தியா – நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள்!

Published On:

| By Balaji

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று (நவம்பர் 25) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களைச் சேர்த்தது.

கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த சிறிது நேரத்தில் புஜாராவும் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ரஹானே 35 ரன்கள் எடுக்க, ஜேமிசன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யரும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து மீட்டு சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர் .சிறப்பாக விளையாடிய ஷ்ரயாஸ் அய்யர் ,ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர் .

இந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கைல் ஜேமிசன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியில் ஷ்ரயாஸ் அய்யர் 75 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

நேற்றைய தினம் போலவே இன்றும் தொடக்க ஓவர் ஸ்விங்கை பேட்டர்கள் சமாளித்துவிட்டால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை நிச்சயம் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment