இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய விவாகரத்து குறித்தும், மறுமணம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி. இமான் சமீபத்தில் மனைவியுடன் விவாகரத்து என்பதை தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். அதில், “நானும் என்னுடைய மனைவி மோனிகா ரிச்சார்ட்டின் வாழ்க்கையும் வெவ்வேறு வழிகளில் பயணம் செய்ய இருக்கிறது. அதனால், நானும் என் மனைவியும் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே மியூச்சுவலாக பிரிந்து விட்டோம்” என சொல்லி இருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனை அடுத்து, அவர் இப்போது மறுமணம் செய்ய உள்ளதாகவும் அதுவும் சொந்தத்திலேயே பெண் பார்த்து உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்தி குறித்தும் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் இமான் தற்போது மனம் திறந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “ஒரு உறவில் இருந்து ஆண், பெண் விலகினாலே அதற்கு முக்கிய காரணம் ஆண் தான். அவன் மீது தான் தவறு என சொல்லி விடுகிறார்கள். ஆனால், இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்பது வெளியில் யாருக்கும் தெரியாது. அதனால், இதை பெரிதுபடுத்தி பேச வேண்டாம்.
அதே போல, எனக்கு இப்போது மறுமணம் செய்து கொள்ளும் எண்ணமும் உள்ளது. எனக்கு மறுமணம் என்பதை விட என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக தான் வரும் பெண்ணை எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல, திருமணம் ஆகாத பெண்ணை நான் மறுமணம் செய்து கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை. அவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தோ அல்லது கணவரை இழந்தவராகவோ இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. அவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தால் நானும் நல்ல அப்பாவாக இருப்பேன். இப்படியான பெண்ணை தான் பார்க்கும்படி என் பெற்றோரிடமும் கூறி இருக்கிறேன்” என்று இமான் மனம் திறந்துள்ளார்.
**ஆதிரா**