மனோபாலா, சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு புகார்!

entertainment

நடிகர்கள் மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகியோருக்கு எதிராக நடிகர் வடிவேலு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் சில காலம் முன்பு வரையில் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரபல காமெடி காட்சிகளுக்கு இப்போது வரையிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் மனோபாலா நடத்திவரும் வேஸ்ட் பேப்பர் என்னும் யூட்யூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் நடிகர் வடிவேலு தொடர்பாக மனோபாலா கேட்ட கேள்விகளுக்கு சிங்கமுத்து சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். மே மாதம் 19 ஆம் தேதி அளித்த அந்தப் புகார் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தப் புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் ‘வேஸ்ட் பேப்பர்’ என்கிற யூட்யூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0