�
சூரரைப்போற்று படத்தை முடித்த கையோடு ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க இருந்தார் சூர்யா. ஆனால், ஹரி சொன்ன கதையில் சூர்யாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் சூர்யா – ஹரி கூட்டணி உடைந்தது. இந்நிலையில், ஹரி இயக்க இருக்கும் அடுத்தப் படத்தில் மைத்துனர் அருண்விஜய் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
ஹரி – அருண்விஜய் கூட்டணி குறித்து நீண்ட நாளாக கூறப்பட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர், தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதியாகாததால் படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்பொழுது, எல்லாம் கைகூடிவந்திருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது.
அருண்விஜய் நடிப்பில் உருவாகும் 33வது படமாகும். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான மாஃபியா படத்திற்குப் பிறகு, அருண்விஜய் – ப்ரியா பவானி சங்கர் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்து நடிக்கிறது.
மேலும், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, ராஜேஷ், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ரமா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 16ஆம் தேதி பழநியில் பரபரப்பாக நடக்க இருக்கிறதாம். பொதுவாக ஹரியின் படத்தின் வேகம் எந்த அளவுக்கு இருக்குமோ, அந்த அளவுக்கு வேகமாகப் படப்பிடிப்பை முடித்துவிடவும் திட்டமாம். ஹரியின் ஃபேவரைட் பகுதிகளான ராம்நாடு, தூத்துக்குடி உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்காம்.
– ஆதினி
�,