நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் அகர்வால் வரிசையில் சீனியர் நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழில் தனுஷுன் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய், ஜெயம்ரவி, ஆர்யா, சூர்யா என உச்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார். அதோடு, நாயகி முக்கியத்துவம் கொண்ட படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
ஹன்சிகா நடிப்பில் ஹீரோயின் முக்கியத்துவம் கொண்ட படமாக உருவாகிவருகிறது ‘மகா’. இது ஹன்சிகாவின் 50வது படம். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நாயகி கதையில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் கொஞ்சம் புது முயற்சியாக இருக்கப் போகிறது.
புது புது முயற்சிகளை எப்போதும் செய்யும் இயக்குநர் பார்த்திபன். சிங்கிள் ஆக்டர் படமாக ‘ஒத்த செருப்பு’ கொடுத்தார். தற்பொழுது, சிங்கிள் ஷாட் திரைப்படமாக ‘இரவில் நிழல்’ படத்தை உருவாக்கிவருகிறார். இதே மாதிரி, தெலுங்கில் சிங்கிள் ஷாட் திரைப்படமொன்று உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் தான் ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.
ஹன்சிகா நடிக்க இருக்கும் இந்தத் தெலுங்குப் படத்துக்கு ‘150 மினிட்ஸ்’ என டைட்டில் வைத்துள்ளனர். இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், இந்தப் படத்துக்கு எடிட்டரே கிடையாது. சிங்கிள் ஷாட் என்பதால் எடிட் பண்ணாமல் அப்படியே படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். ராஜூ துசா என்பவர் இப்படத்தை இயக்குகிறார். துர்கா கிஷோர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சிங்கிள் ஷாட் என்பதால் எல்லாமே சரியாக நடக்க வேண்டும். நடிப்பிலிருந்து கதை வரை. கொஞ்சம் பிசகினாலும் ஒட்டுமொத்தமாக கவிழ்ந்துவிடும். இந்த மாதிரியான படங்களில் பெரிதாக ரிஸ்க் எடுத்து யாரும் நடிக்க மாட்டார்கள். தற்பொழுது ஹன்சிகாவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. கைவசம் ஒரு படம் மட்டுமே இருக்கிறது. மீண்டும் பழைய இடத்துக்கு வரவேண்டுமென்றால் இப்படியான வித்தியாச முயற்சிகள் நிச்சயம் தேவை. திரையுலக கவனத்தை ஈர்க்கவே இப்படியான புது முயற்சிகளுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் ஹன்சிகா.
– ஆதினி
.�,