பாரீஸ் நகரில் நடந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்குப் பிறகு ஐந்தாவது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
இருவருக்கும் இடையேயான இறுதி போட்டி 4 மணி நேரத்துக்கும் கூடுதலாக நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் தனது டென்னிஸ் பேட்டை மைதானத்தில் நின்றுகொண்டிருந்த தனது ரசிகனான ஒரு சிறுவனிடம் ஜோகோவிச் வழங்கினார். ஜோகோவிச் அவர் பயன்படுத்திய டென்னிஸ் பேட்டை தன்னிடம் வழங்கியதால் அந்த சிறுவன் மிகுந்த ஆனந்தம் அடைந்தான்.
தனது ரசிகனான அந்த சிறுவனிடம் டென்னிஸ் பேட்டை அன்பளிப்பாக கொடுத்தது தொடர்பாக பேசிய ஜோகோவிச், ‘போட்டி முழுவதும் அந்த சிறுவனின் பேச்சு எனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த சிறுவன் என்னை ஊக்கப்படுத்தினான். உண்மையைச் சொல்லப்போனால் அவன் எனக்கு வியூகங்களைக் கூறினான். முழுமையாக கூறினால் அந்த சிறுவன் எனக்குப் பயிற்சி அளித்தான்’ என்றார்.
பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை இவர் இரண்டாது முறையாக வென்றுள்ளார். இதற்கு முன்பு 2016இல் கைப்பற்றியிருந்தார். இதன்மூலம் ஜோகோவிச் புதிய வரலாறு படைத்துள்ளார்.
52 ஆண்டுகளில் நான்கு வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் குறைந்தது இரண்டு முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 1969இல் ராட் லாவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 19 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை ஒன்பது முறையும், பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை இரண்டு தடவையும், விம்பிள்டனை ஐந்து தடவையும், அமெரிக்க ஓப்பனையும் மூன்று முறையும் கைப்பற்றினார்.
பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் (ஸ்பெயின்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோகோவிச் உள்ளார். இருவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று முதல் இடத்தில் உள்ளனர். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும்போது அவர்களுடன் ஜோகோவிச்சும் இணைவார்.
**-ராஜ்**
.
�,”