சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டி ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் கலந்து நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய முக்கிய தகவலை நேற்று மாலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது அதன்படி தமிழில் தயாரிக்கப்பட்ட இப்படத்தைத் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளார்களாம்.
இதன்மூலம் சூர்யா நடித்த படம் ஒன்று அகில இந்தியப் படமாகப் பல மொழிகளில் வெளியாவது இதுவே முதன்முறை. இந்த முடிவுக்கு என்ன காரணம் என விசாரித்தபோது ஜெய்பீம்” படத்தின் வெற்றி நடிகர் சூர்யாவைப் பன்மொழி பேசும் மக்கள் அறிந்த நடிகராக மாற்றியுள்ளது.
தமிழ் நடிகராக மட்டுமே அறியப்பட்டு வந்த சூர்யா ஜெய்பீம் படம் சம்பந்தமாகத் தமிழகத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள், போராட்டங்கள், சர்வதேச சமூகத்திடம் அவரை பிரபலப்படுத்தியுள்ளது இதனை வணிகரீதியாக சன்பிக்சர்ஸ் பயன்படுத்துகிறது என்றனர்.
**-அம்பலவாணன்**
�,”