சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகியிருக்கிறது. வக்கீல் உடையை அணிந்துகொண்டு ஜோதிகா நிற்கும் காட்சியே பலவற்றை விளக்கினாலும், போஸ்டரில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மேலும் பலவற்றை விளக்குகின்றன.
ஜோதிகாவுக்கு பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களில், குழந்தைகள் கடத்தல்-கொலை-பாலியல் வன்புணர்வு செய்யப்படுதல் போன்ற பழைய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த செய்திகளுக்கு முரண்பாடாக, ரோஹித் குரூப் நிறுவனத்தின் சேர்மன் வரதராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் செய்தி இடம்பெற்றிருக்கிறது. அந்த டாக்டர் பட்டம் பெறும் வரதராஜனுக்கும், இந்தக் குழந்தைகளின் கடத்தல்-கொலை சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்ற கேள்வியை இந்தப் போஸ்டர் எழுப்புகிறது.
பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அச்சத்தில் வாழக்கூடிய சூழலை சமீபத்தில் நடைபெற்ற பாலியல் ரீதியான சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் இருக்கும் என இந்த போஸ்டர் நிரூபிப்பதாக சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
**-சிவா**�,