கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எம்.ஜி.எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை 6 மணிக்கு வீட்டிலிருந்தபடியே நடிகர், நடிகைகள் பங்கேற்கும் மவுன கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் திரை உலகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி தான். தற்போது அவர் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு இருப்பதை நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது. அந்த கலைஞன் மீண்டு வர நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலை ஒலிக்க விட்டு இந்த ஒரு நிமிட மவுன பிரார்த்தனையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையிலிருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். அதே போல இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த், “பாடும் நிலா…எழுந்து வா! கூட்டுப்பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பியை மீட்டெடுப்போம்! 20.08.2020 இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டுப்பிரார்த்தனையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும் பங்கேற்கவுள்ளனர்.
**-கவிபிரியா**�,”