காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அடுத்து டெல்லி பைல்ஸ் என்ற தலைப்பில் படம் இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தமிழ்நாடு பற்றிய உண்மைகளும் இடம்பெறும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “டெல்லி பைல்ஸ் கதையில் முகலாயர்கள் ஆட்சி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி வரை டெல்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது குறித்து படத்தின் கதைக்களம் அமையும். பெரிய அளவிலான இந்துமத நாகரிகம் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. இது வெறும் டெல்லியைப் பற்றிய படம் மட்டுமல்ல; அதோடு தொடர்புடைய மற்ற உண்மைகளும் இடம்பெறும். குறிப்பாக தமிழ்நாட்டின் பல உண்மைகளைச் சொல்லும்.
இந்துக்களாகிய நாம் பலவீனமானவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். மேற்கத்திய ஆட்சியாளர்களிடமிருந்தும் அல்லது படையெடுப்பாளர்களிடமிருந்துதான் நாம் அனைத்தையும் கற்றுக்கொண்டோம் என்று மற்றவர்கள் சொல்வது முற்றிலும் தவறானவை. வரலாறு என்பது ஆதாரம் மற்றும் உண்மை சார்ந்ததாக இருக்க வேண்டும். கதைகளின் அடிப்படையில் இருக்கக் கூடாது” என கூறியுள்ளார்.
**-இராமானுஜம்**