அக்டோபர் 21ஆம் நாள், இந்திய இறையாண்மையைக் காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல் துறை வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்தப் பேரிடரிலும், களத்தில் முன்நின்று பணியாற்றிய காவல் துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இவ்விழாவை சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மற்றும் வெஸ்லி எழுத்தில் சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் நேற்று (21.10.2021) வெளியாகியுள்ளது.
இந்தப் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது, “வீரவணக்கம் பாடல் உருவானதே ஓர் இனிமையான அனுபவம். கொரோனோ தொற்று காலத்துக்குப் பிறகு, முன்கள பணியாளர்களாகப் பணியாற்றிய, காவல் துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷனருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன்.
அப்போதே அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்டபோது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்குத் திரும்பும்போது இன்னொருவர் கொரோனாவால் மருத்துவமனைக்கு
சென்றார். கொரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்குத் தெரியும், ஆனால் காவல் துறை பணியில் இருந்தபோதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவுமே தெரியாது.
அவர்களைப் பற்றி கேட்ட, ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது திருவள்ளூர் காவல் துறை நண்பர் டாக்டர் வருண் குமார் ஐபிஎஸ், வீர வணக்க நாளையொட்டி ஒரு பாடல் செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டார்.
நம்மால் முடிந்த ஒன்றை இவர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று உடனே ஒப்புக்கொண்டேன். இசை வலிகளை மறக்கடிக்கும் அவர்களின் வலிகளுக்கு, தியாகத்துக்கு எனது சிறு அர்ப்பணிப்பு இந்தப் பாடல்.
மிக குறைவான காலம் இருந்தாலும், மிகச் சிறப்பாக செய்துள்ளோம். பாடல் வரிகளைத் தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுதியுள்ளனர். சில வரிகளை சந்தத்திற்கு ஏற்றவாறு நாங்களே மாற்றி அமைத்தோம்.
பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும், சசிகலாவும் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். திருவள்ளூர் காவல் துறை அதிகாரி வருண் குமார் அவர்களின் ஈடுபாடுதான் இந்தப் பாடல் சிறப்பாக உருவாக காரணம் அவருக்கு நன்றி” என்றார்
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா வெஸ்லி இணைந்து எழுத, சசிகலா அவர்களும் பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய “வீர வணக்கம்” ஆல்பம் பாடலை, நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
**-அம்பலவாணன்**
�,