உலக அளவில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்தியில் 15 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான நிகழ்ச்சி அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் தமிழக மக்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்புதான் அறிமுகமானது பிக்பாஸ்.
தமிழ்த் திரையுலகில் ஆளுமைமிக்க நடிகரான கமல்ஹாசன் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. 2017ம் ஆண்டு ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் கமல்ஹாசன் ஒரு பக்கம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஆரம்பிக்க நடிகை ஓவியா முதல் சீசனில் மிகவும் பிரபலமானார்.
கடந்த நான்கு சீசன்களாக ஒரு வாரம் கூட இடைவெளி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் வாராவாரம் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். இப்போது ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் முதல் முறையாக கமல்ஹாசன் பங்கேற்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் குறைந்தது இன்னும் நான்கு வாரங்களுக்காவது அவர் நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பில்லை. இது கூடுதலாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் திரைதுறை வட்டாரத்தில்.
கொரோனா தாக்கத்தில் இருந்து அவர் மீண்டு வந்த பின்பு, ஓய்வில் இருக்க வேண்டும். அதன்பிறகு மருத்துவர்கள் அனுமதித்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும். கடந்த சீசனில் கூட கமல்ஹாசன் இருக்கும் அரங்கில் பார்வையாளர்கள் இல்லாமல் தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சீசனில் பார்வையாளர்களை அனுமதித்தார்கள். கமல்ஹாசன் மீண்டும் வந்தாலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது சந்தேகம்தான்.
ஐந்தாவது சீசன் ஆரம்பித்து ஏழு வாரங்கள் கடந்துவிட்டது. இன்னும் ஏழு வாரங்கள் வரை நிகழ்ச்சி நடக்க வேண்டும். கமல்ஹாசன் எப்போது வருவார் என்பது தெரியாத நிலைமை கடைசி கட்டத்தில் வேண்டுமானால் அவர் பங்கேற்க வாய்ப்புகள் உண்டு.
இடையில் யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பது யூகிக்க முடியாத நிலை உள்ளது. இருந்தாலும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. யாராக இருந்தாலும் கமல்ஹாசன் இடத்தை நிரப்ப முடியாது என்பது உண்மை. அதனால், டிவி ரேட்டிங் மேலும் குறையும் என்கிற அச்சத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது.
**-இராமானுஜம்**
�,