தமிழ் திரைத்துறையில், இழப்புக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது, எனவே திரைத்துறைக்கு ஒரு வழிகாட்ட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு நேற்றோடு (ஆகஸ்ட் 13) 150 நாட்கள் ஆகிவிட்டன. இதனிடையே சின்ன திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகள் திறப்பு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். பிரபலங்களும், ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை நாம் படப்பிடிப்பு பற்றி யோசிக்க வேண்டாம். மருந்து கண்டுபிடித்த பிறகு அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் திரைத்துறைக்குத் தமிழக முதல்வர் ஒரு வழிகாட்ட வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் பொது முடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம்.
**ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி… படப்பிடிப்புகளையும் நிறுத்தி, 150 நாட்கள் ஆகிறது என்ற வேதனையைத் தமிழ் சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது.**
80க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றது. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்தோடு நின்று எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் முடக்கத்தை முழுமையாகச் செய்துவிட்டோம்.
**இழப்பு மேல் இழப்பு**
எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துறை மீண்டு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் முதலீட்டின் மீதான வரவை எதிர்பார்த்து, இழப்பு மேல் இழப்பைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலீடு போடும்போதே இழப்பு என்ற நிலை மிகக் கொடுமையானது. இந்நிலை தொடராமல் தடுத்து தமிழ் சினிமா மீண்டும் மூச்சுவிட தாங்கள் தயைகூர்ந்து வழிமுறைகளோடு கூடிய ஒரு வழிகாட்டலை திரைத்துறைக்கு வகுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சின்னதிரை படப்பிடிப்புகளுக்கு அளித்த அனுமதியைப் போல எங்களுக்கும் குறுகிய குழுவோடு, பொது இடங்களில் இல்லாமல், ஸ்டுடியோ அல்லது வீடுகளுக்குள் திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடர வழிவகை செய்ய, ஆவண செய்யுமாறு அத்தனை தொழிலாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை நாட்டிற்கான சுதந்திர நாள். அந்த நாளன்று தங்களது சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம். எப்படிப்பட்ட வழிமுறைகளை, விதிகளோடு தந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீறாது, தவறாது சீராக அவற்றைக் கடைப்பிடித்து எம் பிள்ளைகள் கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணி செய்துகொள்வோம் எனத் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
**-கவிபிரியா**�,