பெரிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போதுள்ள சூழலை புரிந்துகொண்டு, தங்கள் சம்பளத்தை குறைத்து, திரைத்துறைக்கு உதவ வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் தனது நீண்ட கால கனவான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஊரடங்கு காலத்திற்கு பின் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம், அடுத்த வருடம் வெளியாகவிருக்கிறது.
[பொன்னியின் செல்வன் ரிலீஸ்: மெட்ராஸ் டாக்கீஸ் அறிவிப்பு!](https://minnambalam.com/entertainment/2020/05/29/33/ponniyin-selvan-on-2021-deadline)
இந்நிலையில், திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்குகளின் எதிர்காலம் – என்ற தலைப்பில் ஒரு வெபினார் தொடரில் இயக்குநர் மணிரத்னம் கலந்துரையாடினார். இதில் பேசிய மணிரத்னம், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட படங்களின் வணிகத்தால், குறைந்த பட்ஜெட்டில் இனி அதிக படங்கள் உருவாகும் என்றும், மேலும் திரைப்படத் தயாரிப்பில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், இதற்காக பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு தமிழ்திரையுலகிற்கு தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளார். எப்போதும் போல நான் பாசிட்டிவாக இருக்கிறேன் எனக்கூறிய மணிரத்னம், “போதுமான மாற்றங்களுடன் சினிமா மீண்டும் இயங்க முடியும் என்றாலும், அதற்கு கொஞ்சம் உதவியும் தேவைப்படுகிறது” எனக் கூறினார்.
இது குறித்து விரிவாக கூறிய மணிரத்னம், “உடனடி தியேட்டர் வெளியீடு கடினமாக இருக்கும். எனவே ஒரு திரைப்பட இயக்குநர் படத்தின் பட்ஜெட் குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மேலும் அது திரைப்படத் தயாரிப்பை சாத்தியமாக்கவும் வேண்டும். இதன் பொருள், அதில் ஈடுபடும் நபர்கள், குறிப்பாக பெரிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போதுள்ள சூழலை புரிந்துகொண்டு தங்கள் சம்பளத்தை குறைத்து, படத்தின் செலவையும் குறைத்து, திரையுலகம் தத்தளிக்காமல் இருப்பதை உறுதிசெய்யவும் உதவ வேண்டும், “என்று அவர் கூறினார்.
இந்த லாக்டவுன் சமயத்தில், இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களுடன் இதற்கு முன்னர் தனது திரைப்பயணத்தை குறித்து இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”