அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 15) பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்றுவருகிறது. மதுரை அவனியாபுரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் துவக்கி வைத்தார். அதில் 680 வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றுள்ளனர்.
வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளைகள் கூட்டத்தில் பாய்வதால், பலரும் காயமடைந்தனர். இதுவரையில் காயமடைந்தவர்கள் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது நான்காவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான குழுவின் தலைவர், கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, விழாக்குழுவில் ஆதிதிராவிட சமூகத்தினர் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை, ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு குழு யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுகிறது என ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றும் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோர் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்தவேண்டும் என அறிவித்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று(ஜனவரி 15) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. இது எங்கள் பாரம்பரிய உரிமை. ஆனால் ராமசாமி என்பவரின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்தக்கூறி உத்தரவிட்டது. இது எங்கள் பாரம்பரிய உரிமைக்கு எதிரானது. எனவே மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன்பு இன்று (ஜனவரி 15) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அதனை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமானால் இது தொடர்பாக மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
�,