அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித். இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ மூலமாக கவனம் ஈர்த்தார். ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தார்.
தொடர்ந்து, தயாரிப்பாளராக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ , மற்றும் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படங்களைத் தயாரித்தார். இந்நிலையில், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தியில் படம் இயக்க இருந்தார். ஆனால், அதற்கான நேரம் அதிகமாக தேவைப்படுவதால் , முன்பாக இவர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’.
குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு 80களில் நடக்கும் கதைக்களமாக ‘சார்பட்டா பரம்பரை’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக துஷாராவும் நடித்துள்ளனர். தவிர, பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரஞ்சித்தின் ஆஸ்தான தொழில் நுட்பக் கலைஞர்களான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளி இந்தப் படத்திலும் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
திரையரங்க அனுபவத்தை மனதில் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். 80களில் மக்களின் வாழ்க்கையை படம் பிரதிபலிக்கிறது. அதை அப்படியே செட் மூலமாக கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். குத்துச்சண்டை போட்டிக்காக ஆர்யா முதல், படத்தில் பணியாற்றிய அனைவருமே கடும் உழைப்பைப் போட்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு படமானது திரையரங்கில் பார்த்தால் மட்டுமே முழு அனுபவத்தையும் பெற முடியும்.
ஆனால், இப்போதைய சூழல் காரணமாக சார்பட்டா பரம்பரை படத்தை ஓடிடி தளத்தில் விற்றுவிட்டார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித். இதற்காக அமேசான் பிரைம் ஓடிடியில் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
வியாபார ரீதியான படமாக இல்லாமல் கலைப்படைப்பாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது ‘சார்பட்டா பரம்பரை’. அதற்காக, படக்குழுவும் பெரும் செலவையும் உழைப்பையும் போட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், ஓடிடியில் வெளியாக இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதோடு, திரையரங்கில் வெளியிட வேண்டுமென கோரிக்கையையும் இணையத்தில் வைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.
**- ஆதினி**
�,