அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் மதி, படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, அருண் விஜய்யின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான மாஃபியா, போதுமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அருண் விஜய்யின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து, அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இத்திரைப்படத்தில்,‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் நடித்த ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ‘எக்ட்செட்ரா என்டெர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இயக்குகிறார்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் இப்படத்தின் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது. தற்போது பொதுமுடக்கம் காரணமாக, தனது வீட்டில் கதாபாத்திரத்திற்கான வடிவம் பெற பயிற்சி பெறும் மதி, ஆன்லைனில் நடிப்பு வகுப்புகளிலும் பயின்று வருகிறார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னதாக அனுராக் காஷ்யப்புடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பேசிய மதி, “நாங்கள் ஏற்கனவே அனுராக் காஷ்யப்புடன் இந்த பாத்திரத்திற்காக பேசினோம். மேலும் அறிவிப்புகளை வெளியிடவும் தயாராக இருந்தோம். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்தன. அருண் விஜய் படத்தில் மூன்று தோற்றங்களைக் கொண்டுள்ளார், அவற்றில் ஒன்றுக்காக அவர் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருக்கவேண்டும். அந்தக் காட்சிகளை நாங்கள் படமாக்கிவிட்டோம். இதனை தொடர்ந்து மாஃபியா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துக் கொடுத்தார்.
இப்போது, அருண் விஜய் மொத்தமாக மீண்டும் 60 நாட்கள் பயிற்சி பெற்று எம்.எம்.ஏ குத்துச்சண்டை வீரரைப் போல தோற்றமளிக்க வேண்டும். பின்னர் மீண்டும் எடையைக் குறைக்க வேண்டும். எனவே அனுராக் போன்ற ஒரு பிஸியான இயக்குநரை நீண்ட காலம் காத்திருக்க எங்களால் கேட்க முடியாது. எனவே, அந்த வேடத்தை செய்ய விவேக் என்னிடம் கேட்டார். நாங்கள் அருணிடம் இது குறித்துப் பேசினோம். அவரும் உற்சாகமாகமாகவே இதனை எதிர்கொண்டார்” என தான் பாக்ஸர் படத்தில் நடிக்க வந்த கதையை கூறினார் மதி.
மேலும் தனது வேடம் குறித்து கூறிய மதி, “படத்தில் அருணின் கதாபாத்திரத்துடன் நான் மோத வேண்டியதில்லை. நான் அவரது மேலாளராக நடிக்கிறேன். அவர் ஒப்பந்த காலத்திற்கான அனைத்து சண்டை பணிகளையும் நான் கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர் சொந்தமாக ஏதாவது செய்ய முடிவுவெடுக்கும் போது, நான் அவருக்கு எதிராக திரும்புவேன்” என தனது கதாபாத்திரத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார் மதி.
ரித்திகாவுடன் இணைந்து சஞ்சனா கல்ரானியும் படத்தில் நடிக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க,, மார்கஸ் ஒளிப்பதிவைக் கையாளுகிறார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,