அருண்விஜய் ஷூட்டிங்கில் கொரோனா; ஹரிக்கு காய்ச்சல் !

Published On:

| By Balaji

சாமி, சிங்கம் மாதிரியான ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஹரி. இவர் இயக்கத்தில் ‘அருவா’ படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது. இந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியானது. ஆனால், ஹரி சொன்னக் கதையில் சூர்யாவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் அருவா திட்டம் கைவிடப்பட்டது.

அதன்பிறகு, மைத்துனர் அருண்விஜய்யை வைத்து புதிய படமொன்றைத் துவங்க இருப்பதாக அறிவித்தார். சமீபத்தில், ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அருண்விஜய்யுடன் நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். காமெடி ரோலில் யோகிபாபு நடிக்கிறார். ‘அருண்விஜய் 33’ என இப்படத்துக்கு தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பழநி அருகே நெய்காரப்பட்டியில் அருண்விஜய், யோகிபாபு கலந்துகொள்ள கடந்த ஒருவாரமாக நடந்துவந்தது. படப்பிடிப்பின் தயாரிப்புப் பிரிவைச் சேர்ந்த நபருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்திருக்கிறது. அவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உடனடியாக, பழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளார். அதோடு, இயக்குநர் ஹரிக்கும் லேசாக காய்ச்சல் இருக்கிறதாம். ஹரிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள் முதல் தொழில் நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான ரிசல்ட் இன்னும் வரவில்லை. அதோடு, படப்பிடிப்பையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது படக்குழு.

பழநியில் படக்குழுவினர் பலர் கோவில், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அதனால், யாருக்கேனும் தொற்று உறுதியானால் பழநியில் கொரோனா பரிசோதனையை முடுக்கிவிடவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

– ஆதினி

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share