நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஐஷ்வர்யா ராயிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தன்னுடைய அடுத்த படத்தில் ரஜினியை இயக்குவார் என செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் ரஜினிகாந்த்தின் 169ஆவது படத்தை நெல்சன் இயக்குவது உறுதி என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
‘பீஸ்ட்’ திரைப்படம் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரலில் வெளியான பிறகு ரஜினிகாந்த் படத்தின் பூஜையுடன் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. அந்த சமயத்தில் படத்தில் பணிபுரியும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.
இந்த நிலையில், ரஜினிகாந்த்தின் 169வது படத்திற்கு கதாநாயகியாக ஐஷ்வர்யா ராயிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக தெரிகிறது. கடந்த 2010ஆம் வருடம் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஐஷ்வர்யா ராய் ‘எந்திரன்’ படத்தில் நடித்தார். அதற்கு பிறகு மீண்டும் தமிழில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கிறார். இப்போது மீண்டும் ரஜினிகாந்த்தின் 169வது படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
**ஆதிரா**