செஃப் வெங்கடேஷ்பட் நெகட்டிவ் கமெண்ட்டுகளுக்கு இனி பதிலளிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
‘குக் வித் கோமாளி’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பலருக்கும் தெரிந்த ஒரு பிரபலமாக மாறியவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் கோமாளிகளை ஜாலியாக மிரட்டுவது,நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்காக அவர்களுடன் சேர்ந்து காமெடி செய்வது என நிகழ்ச்சியின் கலகலப்புக்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால், இவர் கோமாளிகளை நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்காக போலியாக மிரட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் சமூக வலைதளங்களில் நிஜமாகவே வெங்கடேஷ் பட் அடித்தாரா, மிரட்டினாரா என்பது போன்ற விவாதங்களை ஏற்படுத்தும். ’நிகழ்ச்சியின் கலகலப்புக்காகவே இப்படி செய்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும், நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும் நன்றாக தெரியும்’ எனவும் விளக்கம் கொடுத்திருந்தார் பட்.
மேலும் இவர் தனது யூடியூப் சேனலிலும் சமையல் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்களிலும் அவர் கைகளில் கட்டியிருக்கும் கயிறு, சமையலுக்கு அவர் பயன்படுத்தும் பொருட்களின் அளவு, பொருட்கள் என இதை எல்லாம் சம்பந்தப்படுத்தி எதிர்மறை கமெண்ட்டுகளை சிலர் பதிவிட்டு வந்தனர். இவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் வெங்கடேஷ் பட் கொடுத்த பதிலும் பேசு பொருளானது.
இதனையடுத்து, ’இனி நெகட்டிவ் கமெண்ட்டுகளுக்கு பதிலளிக்க போவதில்லை எனவும் நெகட்டிவ் கமெண்ட்கள் அப்படியே இருக்கட்டும். இனி நிகழ்ச்சிக்கு போனேனா, அதில் சந்தோஷமாக இருந்தேனா என்றிருக்க முடிவெடுத்துள்ளதாக வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
**ஆதிரா**