விஸ்வரூபமெடுக்கும் நடிகர் விமல் கடன் பிரச்சினை!

Published On:

| By Balaji

நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் உள்பட மூன்று பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விமல் தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகச் சொல்லி தயாரிப்பாளர் சிங்காரவேலன் உள்ளிட்ட மூன்று பேர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகார் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டது.

நடிகர் விமல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்தேன். பணப் பிரச்சினை காரணமாக அந்தப் படத்தை தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன்.

பைனான்சியர்களான சிங்காரவேலன், கோபி ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்தனர். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

படத்தை தயாரிக்க மூன்று கோடி ரூபாய் செலவானதாகவும், அதை விற்பனை செய்ததில் நான்கு கோடி ரூபாய் கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த நான்கு கோடி ரூபாய் பணமும் கடனாக வாங்கிய மூன்று கோடி ரூபாய் பணத்துக்கான வட்டிக்குச் செலவாகி விட்டதாக சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார்.

அசல் மூன்று கோடி ரூபாய் பணத்துக்காக படங்கள் நடித்து சம்பளத்தின் மூலமாகக் கொடுத்தேன். இதனிடையே ‘மன்னர் வகையறா’ படத்தை விற்பனை செய்ததில் எட்டு கோடி ரூபாய் கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மேலும் தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாகப் பயன்படுத்தி பல ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்துள்ளனர். தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த இந்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு தொடர்வதற்கான உத்தரவைப் பெற்றார்.

அதன் பிறகு தற்போதுதான் விருகம்பாக்கம் போலீஸார் சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் உள்ளிட்ட மூவரும் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல், பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் தயாரித்து நடித்து 2018இல் வெளியான மன்னர் வகையறா படம்தான் விமலைச் சுற்றிவரும் கடன் பிரச்சினைகளுக்கு காரணம்

இதில் இருந்து தப்பிக்க 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட தன் மனைவிக்கு வாய்ப்பு கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்தார். இதன் மூலம் தன்னை திமுக அனுதாபியாக திரையுலகில் முன்னிறுத்த முயற்சி செய்தார்.

நடிகர் விமலால் பாதிக்கப்பட்டவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதாரங்களுடன் கடிதம் எழுதியதால் அவரது மனைவியின் விருப்ப மனு ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.

தமிழகத்தில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்கங்களில் பணப் பிரச்சினைக்காக அதிகமான புகார் பதிவு செய்யப்பட்டிருக்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பது விமல் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் தரப்பில்.

இவை அனைத்தையும் மடை மாற்றி, திசை திருப்பவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்கின்றனர் திரையுலக வட்டாரத்தில். விமல் புகார் மனு அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் இது பற்றி கேட்டபோது,

“தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க பைனான்ஸ் கொடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம் விமல் போன்ற நடிகர்களும் ஒரு காரணம். விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விமல் எங்கள் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்தபோது, எங்களது தரப்பு நியாயத்தைக் கூறியதுடன் அதற்கான ஆவணங்களையும் சமர்பித்திருக்கிறோம்.

ஆனால், நடிகர் விமல் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரிடம் நேர்மையிருந்திருந்தால் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வருகை தந்திருப்பார். அவரது புகாருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதுடன் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் இருக்க கடந்த நான்கு வருடக் காலமாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகிறார். ஏற்கனவே இவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விமல் விசாரணைக்கு ஆஜராகாததுடன், உரிய ஆவணங்கள் எதையும் சமர்பிக்காததால் புகார் மனு மீது மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் முடிக்கப்பட்டது.

தற்போது நீதிமன்றத்தின் மூலம் எங்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதால் அதைச் சட்டப்படி எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். நடிகர் விமல் பாக்கி வைத்திருக்கும் விவரங்கள், மன்னர் வகையறாவின் பட்ஜெட், வியாபாரம், வசூல் விவரங்களை சம்பந்தபட்டவர்களின் நேரடி வாக்குமூலம், முதலீடே இல்லாமல் விமல் படத்தயாரிப்பில் ஈடுபட்டது போன்ற தகவல்களை உரிய ஆவணங்களுடன் குறும்படமாக தயார் செய்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வருகிற புதன்கிழமை வெளியிட உள்ளோம்” என்றார்

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share