நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

Published On:

| By Balaji

தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.

அவரது மறைவு குறித்து மூத்த நடிகரான சிவகுமார் எழுதியிருக்கும் அஞ்சலி பதிவு…

“மிகையுணர்ச்சி அல்லாமல் தனது இயல்பான நடிப்பை எப்போதும் வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், தனது 81ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மறைந்தார். அவருக்கு அஞ்சலி.

1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த்.

ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால் மேடை நடிகராகப் பிரபலமடைந்தவன் ‘வெங்கி’ என்கின்ற இந்த ஸ்ரீகாந்த். பாலசந்தருடைய ‘மேஜர் சந்திரகாந்த்’ என்ற நாடகத்தில் ‘ஸ்ரீகாந்த்’ என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமானபோது தனக்குச் சூட்டிக்கொண்டான்.

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களிலே சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் கிளப் ஹவுஸில் அந்த இருவரையும் காப்பாற்றியவர்.

கதாநாயகனாகச் சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘ஜெயகாந்தனின் கதை’, ‘ராஜநாகம்’ போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு ‘மதனமாளிகை’, ‘சிட்டுக்குருவி’, ‘இப்படியும் ஒரு பெண்’, ‘அன்னக்கிளி’, ‘யாருக்கும் வெட்கமில்லை’, ‘நவகிரகம்’ என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்திலே 80 வயது பூர்த்தியாகி விழா கொண்டாடினார். அன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஸ்ரீகாந்த், அவரது துணைவியார் லீலாவதி, மீரா அவர் கணவர் ஜாக் அலெக்‌ஸாண்டர், பேத்தி காவேரி ஆகியோரைச் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு காபி டேபிள் புத்தகங்களை கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தேன். இன்று அந்த அற்புதக் கலைஞர் அமரராகி விட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சிவகுமார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share